Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 91 (Sura 91)
1; சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
2; (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
3; (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
4; (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
5; வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
6; பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
7; ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
8; அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
9; அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
10; ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
11; ´ஸமூது´ (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
12; அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
13; அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
14; ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் – ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
15; அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.

Pages ( 91 of 114 ): « Previous1 ... 8990 91 9293 ... 114Next »