Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 90 (Sura 90)
1; இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
2; நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
3; பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
4; திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
5; ´ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்´ என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
6; “ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.
7; தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
8; அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
9; மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
10; அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
11; ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
12; (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
13; (அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
14; அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
15; உறவினனான ஓர் அநாதைக்கோ,
16; அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
17; பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
18; அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
19; ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
20; அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.

Pages ( 90 of 114 ): « Previous1 ... 8889 90 9192 ... 114Next »